darbar USA others

டிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 07, 2020 10:53 PM

கரூர் அருகே தாய், தந்தை கண்முன்னே நொடியில் 2 வயது குழந்தை, மர்மநபரால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

karur 2 years old child kidnapped by unknown person

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள பாலத்துறை செல்லப்ப கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(32) . கட்டிட தொழிலாளியான இவருக்கு விஜயலெட்சுமி (28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மிதுன் (2) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கார்த்திக் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு விஜயலெட்சுமி துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

கார்த்திக் தனது குழந்தைகளுடன் கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் டிப்-டாப் உடை அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வந்தார். பின்னர் கார்த்திக் மற்றும் விஜயலெட்சுமியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை மிதுன், டிப்-டாப் ஆசாமி வந்த பைக்கில் ஏற வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதற்கு தாய் விஜயலெட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் மிதுனை அந்த மர்மநபர், பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரையோரத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சுற்றிக்கொண்டிருந்த டிப்-டாப் மர்மநபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மிதுனின் பெற்றோர் அப்பகுதியில் மகனை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் மிதுன் கிடைக்கவில்லை. அதன்பிறகு தான் மிதுனை பைக்கில் வந்த டிப்-டாப் ஆசாமி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து விஜயலெட்சுமி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #KID #CHILD #KIDNAPPED #MOTHER #FATHER