‘பயிருக்கு தண்ணீர் பாய்ச்சலனா கருகிடும்’... ‘குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு சென்ற விவசாயிக்கு'... 'மர்மநபர்களால் ஊரடங்கின் போது நடந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 10, 2020 09:41 PM

ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போர்செட்டில் படுத்திருந்த விவசாயி ஒருவர், மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

During the Lockdown Orathanadu police investigation on farmer murder

ஒரத்தநாடு அருகேயுள்ள சங்கரநாதன் குடிக்காடு மேலத் தெருவை சேர்ந்தவர் 63 வயதான திருமேனி. விவசாயியான இவர், தன்னுடைய வயலில் சில தினங்களுக்கு முன் நாற்று நடும் பணியைச் செய்துள்ளார். பின்னர் தனது குடும்பத்தாரிடம், தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால், நடவு செய்த பயிர்கள் கருகிவிடும என்று கூறி, நேற்று இரவு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலில் உள்ள பம்ப் செட்டில் தங்கியிருக்கிறார்.

இந்தநிலையில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் திருமேனியின் கை, கால், முகம் என உடலில் பல இடங்களில் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். காலை அந்த வழியாக வயலுக்குச் சென்றவர்கள் திருமேனி சடலமாகக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாகப் பாப்பாநாடு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாகத் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டாரை இயக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர் குறித்து திருமேனி குடும்பத்திற்கும் வேறு சிலருக்கும் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என விசாரணை செய்து வரும் போலீசார், கொலையாளிகள் திருமேனியின் முகத்தை சிதைத்து,  அவரின் வலது கையைத் தனியாக வெட்டி வீசியதால், கூலிப்படையினர் வைத்து கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.