'விமான நிலையத்தின் கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிக்க' ... மாத்திரையை உட்கொண்ட லண்டன் மாணவர்கள் ... தெலுங்கானாவில் அதிகரிக்க வாய்ப்பு?
முகப்பு > செய்திகள் > இந்தியாலண்டனிலிருந்து ஹைதராபாத் வந்த மாணவர்கள், விமான நிலையத்தின் சோதனையின் போது தப்பிக்க வேண்டி உடம்பின் வெப்பத்தை குறைப்பதற்காக பேராசிட்டமால் மாத்திரையை உட்கொண்டதாக சக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து கடந்த புதன்கிழமை விமானம் மூலமாக மும்பை வந்தடைந்த அகில் எனம்செட்டி என்பவர் தற்போது தனிமைபடுத்தப்பட்டு ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் உள்நாட்டு விமானத்தில் வந்த பத்து பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என்பதை அறிய வேண்டி உடம்பின் வெப்பத்தை விமான நிலைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 'லண்டனிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள் என்னுடன் சேர்ந்து விமானத்தில் பயணித்தனர். விமான நிலையத்தில் நடத்தப்படும் வெப்ப சோதனையில் இருந்து தப்பித்துக் கொள்ள விமானம் தரையிறங்க ஒரு மணி நேரம் இருக்கையில் அனைவரும் உடம்பின் வெப்பத்தை குறைக்க பேராசிட்டமால் மாத்திரையை உண்டனர்' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில் எனம்செட்டி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், 'லண்டனில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன் விமானத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் மாணவர்கள் தங்களுக்குள்ள அறிகுறிகள் குறித்த பொய்யான தகவல்களை நிரப்பினர். இப்போது அந்த மாணவர்கள் அவர்களது குடும்பத்துடன் அல்லது மற்ற பொதுமக்களுக்கு அருகில் தங்கிக் கொண்டிருக்கலாம். எனக்கு சிறிதாக இருமல் இருந்தது. அதுவும் தற்போது குணமடைந்து விட்டது. நாட்டை காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்' என தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் இருக்க வேண்டி மாணவர்கள் மாத்திரையை உண்டு விமான நிலையத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளதால் அந்த மாணவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டால் மற்றவர்களிடையே பரவ அதிக வாய்ப்புள்ளது. தெலுங்கானாவில் இதுவரை 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
