விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம்... சாதுவாக பேசி... திருடர்கள் கைவரிசை!... சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த கோவில் பதாகை, பூங்கொடி நகரை சேர்ந்தவர் அருள்முருகன். இவருக்கு ஹரிபிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இவரும், இவர் மனைவியும் வேலைக்குச் செல்லும்போது, தினமும் தங்கள் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் பார்த்து கொள்ளுமாறு விட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் தனது குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அதன் பின், அவர்கள் மாலை வீடு திரும்பியதும் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது, குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியல் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் நந்தா ஆகிய ஆட்டோ டிரைவர்கள் குழந்தையிடம் செயினை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "அருள்முருகன் வீட்டின் அருகே கிரஹப்பிரவேச நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, ஆட்டோவில் வந்த இரு டிரைவர்கள் குழந்தையிடம் சாதுவாக பேசி அழைத்துள்ளனர். பின்னர், குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கழட்டி எடுத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடையில் அடகு வைத்திருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலி மீட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
