“சார் நான் அந்த ஆபிஸ்லேர்ந்து பேசுறேன்’’... ‘‘உங்க ஏடிஎம் கார்டு நம்பரை சொல்லுங்க’’... ‘மர்மநபரால் நடந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏடிஎம் கார்டு நம்பரை வாங்கிக் கொண்டு நூதன முறையில் பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![பண மோசடி | Mysterious person who fraudulently obtained an ATM number பண மோசடி | Mysterious person who fraudulently obtained an ATM number](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/mysterious-person-who-fraudulently-obtained-an-atm-number.jpg)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் கடந்த 5 வருடங்களாக பணம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் கட்டிய பணத்தை திருப்பித் தராமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் அலைக் கழிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, மர்மநபர் ஒருவர் மாரிமுத்துவை தொடர்பு கொண்டுள்ளார்.
‘தாங்கள் கட்டிய பணத்தின் ஒரு பகுதியை தர இருப்பதாகவும், அதனால் ஏடிஎம் கார்டின் எண்ணை தருமாறும்’ கேட்டுள்ளார். மாரிமுத்துவும் கட்டிய பணம் மீண்டும் கிடைக்கப் போகிறது என்று நினைத்து, தனது ஏடிஎம் கார்டு நம்பர் மற்றும் ரகசிய எண்ணை கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மாரிமுத்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நூதன முறையில் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)