'எங்க புள்ளையே போயிட்டான்!.. அதனால'... உயிரிழந்த ஒரே மகனின் நினைவால்... பாசப் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!.. நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 02, 2020 03:28 PM

மகனை இழந்த துயரத்தில் ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

karur couple commit suicide after losing their only son

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர்கள் சேகர்- கிருஷ்ணவேனி தம்பதியினர். சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாக செயல்பட்டதால் இவருக்கு நல்ல பெயர் உண்டு. இவர் மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் மரக்கன்று நடுதல், கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது என சமூக பணிகளைச் செய்து வந்தனர்.

இதற்கிடையில், இவர்களின் ஒரே மகன் பாலச்சந்திரன் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, சேகர்-கிருஷ்ணவேனி தம்பதி மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இருவரும் கரூர்-திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகனின் நீங்கா நினைவால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #PARENTS #SON #LOVE