'தமிழகத்தை உலுக்கிய கோரம்'...'தூக்கத்துல கேட்ட மரண ஓலம்'... '20 பேரை காவு வாங்கிய' விபத்து நடந்தது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திற்கு இன்றைய காலைப் பொழுது பெரும் பயங்கரத்தைக் கொடுத்திருக்கிறது. இன்று அதிகாலை அவிநாசி அருகே நடந்த கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்திற்கு லாரி ஓட்டுநர் தூங்கியது தான் தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள அரசிற்குச் சொந்தமான வால்வோ சொகுசு பேருந்து பெங்களூருவிலிருந்து திருப்பூர் வழியாக, ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதிகாலை மூன்றரை மணியளவில் அவினாசி தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது, எதிரே சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் உடைத்துச் சென்று பேருந்தின் மீது மோதியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த லாரி 100 அடி தூரத்திற்குத் தாறுமாறாகச் சென்றுள்ளது.
லாரி மோதிய வேகத்தில், அதிலிருந்த கண்டெய்னர் பேருந்தின் மீது சரிந்துள்ளது. இதனால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சிதைந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்கத்தில் கண் அயர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே விபத்தில் காயங்களுடன் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், ''வால்வோ பேருந்து என்பதால் வெளியில் நடக்கும் ஏதும் அவ்வளவு எளிதில் உள்ளே கேட்காது. மேலும் அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். லாரி மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதியிலிருந்தவர்கள் தூக்கத்திலேயே பரிதமபாக உயிரிழந்தனர்'' என அவர் கூறினார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகக் கேரளாவிலிருந்து சிறப்புக் குழு அவினாசிக்கு விரைந்துள்ளது.
