'4,500 ஏக்கர்'... 'சென்னையில் வரப்போகும் இரண்டாவது 'ஏர்போர்ட்'... இடம் குறித்து வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 2-வது விமான நிலையத்தை அமைக்க விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முக்கியமான ஒன்றாகும். இதில் விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் ஒன்றை அமைக்க, விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இந்த பணிகளுக்காக மாமண்டூர் மற்றும் செய்யூருக்கு இடையே உள்ள பகுதியும் காஞ்சிபுரத்துக்கும், அரக்கோணத்துக்கும் இடையிலுள்ள பரந்தூர் ஆகிய இரு இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலைய பணிகள் மேற்கொள்வதற்கு முன்பு, அதற்கான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் கோரப்பட்ட இருக்கிறது. அதில், தேர்வு செய்யப்படும் நிறுவனம் விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.
மொத்தம் மொத்தம் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் விமான நிலையம், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட இருப்பதோடு, பசுமை வெளி விமான நிலையமாகவும், அதில் நட்சத்திர விடுதிகள் உட்படப் பல வசதிகளோடு விமான நிலையம் அமைய இருக்கிறது.
