10 மாதங்களுக்கு முன் நடந்த 'சம்பவம்'... போதையில் உளறிய 'கஞ்சா வியாபாரி'... 'காணாமல்' போன சிறுவனுக்கு ஏற்பட்ட 'கோர' நிகழ்வு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பல்லாவரம் அருகே 10 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் வசித்து வரும் தனசேகர் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது 2வது மகன் லோகேஷை காணவில்லை என்றும், தெரிந்தவர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் அவன் குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். லோகேஷைக் கண்டுபிடித்து தரும்படி அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கஞ்சா வியாபாரி ஒருவர் போலீஸாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, அனகாபுத்தூரைச் சேர்ந்த லோகேஷின் நண்பர்கள் பிரவீன் என்கிற மாட்டு பிரவீன், நித்தீஷ் ஆகியோர்தான் லோகேஷைக் கடைசியாக சந்தித்தனர் என்ற தகவலை போதையில் உளறினார்.
இதையடுத்து, பிரவீன் மற்றம் நித்தீஷை போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும் லோகேஷை கொன்று சடலத்தை கிணற்றில் வீசியதை ஒப்புக் கொண்டனர். அனகாபுத்தூர் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான பாழடைந்த கிணற்றிலிருந்து லோகேஷின் எலும்புக் கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர். இதையடுத்து, லோகேஷைக் கொலை செய்த குற்றத்துக்காக பிரவீன், நித்தீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
