18 நாட்கள் 'போராட்டம்'... 18 மாதங்கள் 'நோயால்' அவதி... தாய்லாந்து குகையில்... சிறுவர்களை மீட்ட 'வீரர்' மரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Dec 29, 2019 12:59 AM

தாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்ட வீரர் மரணம் அடைந்ததாக, கடற்படை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thailand navy Seal dies of infection from cave rescue

கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள தி தம் லுவாங் என்ற குகையை பார்வையிட, உள்ளூர் கால்பந்தாட்ட வீரர்கள் கொண்ட குழு சென்றது. 16 வயதுக்குட்பட்ட 12 சிறுவர்கள் அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர் சென்றனர். திடீரென பெய்த மழையால் அவர்கள் அனைவரும் குகைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் கடற்படை, பேரிடர் மீட்புக்குழுவினர் கைகோர்த்தனர். இந்த மீட்பு பணியின்போது ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணியில் கடற்படை வீரர் உயிரிழந்தார். 18 நாட்கள் போராட்டத்துக்குப்பின் சிறுவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் ஈடுபட்ட வீரர்கள் அனைவருக்கும் உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த சம்பவம் நடந்து சரியாக 18 மாதங்கள் கடந்த நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட பீரட் புர்ரேராக் என்னும் வீரர் நோய்த்தொற்று காரணமாக இறந்து விட்டதாக கடற்படை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீர்மூழ்கி வீரரான Beiret Bureerak மீட்புப்பணியில் இருந்த போது அவருக்கு ரத்தத்தில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த ஓராண்டுகளாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்,'' என தெரிவித்து உள்ளது. இந்த தகவல் தற்போது தாய்லாந்து மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : #MURDER