“கடந்த 35 வருஷத்துல இது ரொம்ப கம்மி!”.. 'அசராத' ஆராய்ச்சியாளர்கள்!.. 'அடுத்தடுத்து' கொடுக்கும் 'ஷாக்கிங்' ரிப்போர்ட்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 21, 2020 09:37 AM

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

baby birth rate decreases in america , says researchers

இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் இதுவரையில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 93 ஆயிரம் பேர் இறந்துமுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் தற்போது குறைந்து வருவதாகவும், எதிர்காலத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை இன்னும் குறையும் என்றும் கடந்த 35 ஆண்டுகளில் இது தற்போது மிகக்குறைவு என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து எமோரி பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறைத் தலைவர் டெனிஸ் ஜேமீசன்  கூறுகையில்,  “நிச்சயமற்ற எதிர்காலம், எதிர்காலத்தைப் பற்றிய கவலை உள்ளிட்டவற்றால் பெண்கள் குழந்தை பெறுவது தொடர்பாக இரண்டு முறை சிந்திக்கப் போகிறார்கள்” என்று அதிர்ச்சிபட தெரிவித்துள்ளார். முன்னதாக 2018 ஆம் ஆண்டிலிருந்த பிறப்பு எண்ணிக்கை அமெரிக்காவில் ஒரு சதவீதம் குறைந்து, தற்போது 3.7 மில்லியன் குழந்தைகளே பிறந்துள்ளதாகவும், 2014ஆம் ஆண்டை தவிர 2007 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த பின்னரும் இவ்வாறு குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி ஒருபுறம் கவலையுடன் ஜேமீசன் இப்படி சொல்ல, இன்னொருபுறம், கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் சேன்டெல்லி,  “பெரும்பான்மையான தம்பதிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் பெறுவதை பொருளாதாரம், குறைந்த ஊதியம், நிலையான வேலை இன்மை உள்ளிட்ட பல விஷயங்கள் காரணமாகவும் தள்ளி வைத்து வருகின்றனர். இதற்கு காரணம், இந்த காரணங்கள் எல்லாம் குறித்து தம்பதிகளும் பெண்களும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதுதான். இதனால் குழந்தை பெறுவது குறித்து ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில குழுக்களிடையே குழந்தைபிறப்பு அதிகமாகவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் முதன்மை ஆசிரியர் பிராட்டி ஹேமில்டன், “கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் மகப்பேறு வார்டுகளில் குழந்தை பிறப்பு தொடர்பான விஷயங்களில், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பம் வரை தெளிவான புரிதலை கொடுக்காது” என்று தெரிவித்துள்ளார்.