'சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்'... 'கொலையா, வனவிலங்கு தாக்குதலா?'... 'அதிர வைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 04, 2020 04:56 PM

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Unknown male human skeleton found in Coonoor Mettupalayam

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையையொட்டி உள்ளது மரப்பாலம். அடர்ந்த காடுகள் நிறைந்த இந்த வனப் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில், மனித எலும்புக்கூடு கிடப்பதாக அந்தப் பகுதி பழங்குடியின கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிதைந்த நிலையில் எலும்புக் கூடாக ஒரு சடலம் பள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

மிகவும் சரிவான பகுதி என்பதால் சடலத்தை மீட்பதில் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3 மணிநேரம் போராடி சடலத்தை போலீசார் மேலே கொண்டு வந்தனர். மரப்பாலம் வனப்பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் கிடந்த அந்த சடலம் ஆண் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மாத காலமாக இந்த ஆண் சடலம் காட்டுக்குள் கிடந்திருக்க வாய்ப்புள்ளது எனக் கூறும் போலீசார், வனவிலங்கு தாக்கியதில் அவர் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர். மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அதன்பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Photo Credits: Vikatan

Tags : #CRIME