‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகள் பேச்சியம்மாள் (15). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருக்கும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியைகள் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற பேச்சியம்மாள் வீட்டுக்குத் திரும்பி வந்த பின்னர் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் அவர்கள், “அரையாண்டுத் தேர்வில் பேச்சியம்மாள் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் அவருடைய பெற்றோரை பள்ளிக்கு அழைத்துப் பேசியுள்ளனர். அவர்களிடம் பேச்சியம்மாளை வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகும் பள்ளிக்குச் சென்ற மாணவியை ஆசிரியைகள் திட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
அதனால் மனமுடைந்து வீட்டுக்கு வந்த சிறுமி சீருடையுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
