‘தாத்தாவுடன் பள்ளிக்கு சென்ற’... ‘சிறுமிகளுக்கு நடந்த சோகம்’... 'கதறித் துடித்த பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 28, 2020 05:58 PM

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2nd Standard girl Student died in accident, 2 injured

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தார். மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யா, கெலமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சவுந்தர்யாவை அவரது தாத்தா பசப்பா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமி வனிதாவும் உடன் சென்றாள். ஜெ.காருப்பள்ளி கிராமத்தின் அருகே கூட்டுரோடு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சவுந்தர்யாவும், அவரது தாத்தா பசப்பாவும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வனிதா விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளால், விபத்துக்கள் இந்தப் பகுதியில் நடப்பதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் சாலையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், சிறுமியின் உறவினர்களிடையே சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர், சிறுமி வனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.