‘பிரசவத்தின் போது’... ‘கர்ப்பிணி இளம் பெண்ணுக்கு’... ‘அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்’... ‘பரிதவித்த குடும்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 21, 2020 07:05 PM

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant Woman died During delivery in Government hospital

திருப்பத்தூர் டவுன் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் (27). இவர் கஜன்நாயக்கன்பட்டியில் செருப்புக் கடை வைத்து வருகிறார். இவருடைய மனைவி பரீதா (23). இவர்களுக்கு 3 வயதில் முகமது என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பரீதா 2-வது முறையாக கர்ப்பமடைந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு இன்று  அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பரீதா, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் இதனைக் கண்டு பணியிலிருந்த செவிலியருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ‘செவிலியரோ போய் காத்திருங்கள் வந்து பார்க்கிறோம், மருத்துவர்கள் யாரும் இல்லை என்று அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதிக வலியின் காரணமாக குழந்தையின் தலைப்பகுதி வெளியே வரவே திரும்பவும் உறவினர்கள் செவிலியரிடம் கூறியுள்ளனர். அப்போது அதிகாலை 6 மணிக்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் பரீதாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

காலை 7 மணிக்கு பரீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, செவலியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தை பிறந்த சில நிமிடங்களில் பரீதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக்கண்ட உறவினர்கள், உடனே செவிலியர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது, செவிலியர்கள் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாகவும், சாப்பிட்ட பிறகு வருகிறோம் என உறவினர்களிடம் அலட்சியமாக பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மூச்சுத் திணறல் காரணமாக பரீதா குழந்தை பிறந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட உறவினர்கள் ஆவேசடைந்தனர். உடனே, பரீதாவின் உறவினர்கள் அங்கு திரண்டனர். பரீதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காததாலும், மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தினாலும் பரீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய உறவினர்கள், மகப்பேறு அவசர சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags : #DELIVERY #PREGNANT #WOMAN