'டிரைவர்' பணிக்கு திரண்ட 'பி.எச்.டி., எம்.ஃபில்.,' பட்டதாரிகள்... 'வேலை' என்னவோ 3 பேருக்குத்தான்... 'நேர்காணலுக்கு' வந்தவர்களோ '500க்கும்' மேல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர், டிரைவர் வேலைக்கு பி.எச்.டி. பட்டதாரிகள் ஏராளமானோர் திரண்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், கிளார்க் ஆகிய 3 பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு அலுவலகம் சார்பில் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த பணிகளுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 68 பேர் டிரைவர் பணிக்கும், 160 பேர் அலுவலக உதவியாளர் பணிக்கும், 248 பேர் கிளார்க் பணிக்கும் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு இன்று காலை நேர்காணல் நடைபெற்றது. இதற்காக இன்று காலை 8 மணிக்கு ஏராளமான பட்டதாரிகள் அங்கு குவிந்தனர்.
இவர்களில் பி.எச்.டி., எம்.ஃபில். படித்த முதுகலை பட்டதாரிகள், இளநிலை பட்டதாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர். டிரைவர் வேலைக்கு பி.எச்.டி. பட்டதாரிகளும், முதுகலை, இளநிலை பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
