'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்'... 'தமிழகத்தின் நிலை என்ன?'... 'மத்திய அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்!"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் பொது மக்களிடையே பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2018 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்த 4155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டை விட 18% அதிகமாகும்.
பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அந்த புள்ளி விவரப் பட்டியலில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுள், 49% பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை என தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்தப் பட்டியலில், தமிழகம் முதல் 5 இடங்களில் உள்ளது.
தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், நாளுக்கு நாள் புது வடிவம் பெற்று வருகின்றன. அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
