அன்னிக்கு தான் ‘ஃபோன்ல’ பேசினோம்... ‘கிளம்பி’ வரதுக்குள்ள... திருமணமான ‘நான்கே’ மாதத்தில் ‘சென்னையில்’ நடந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 23, 2020 07:42 AM

சென்னையில் திருமணமான 4 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Woman Commits Suicide After 4 Months Of Marriage

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் (38) என்பவர் காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (30) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுக்க விரைந்து சென்ற காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “என்னுடைய அக்கா கடந்த 20ஆம் தேதி என்னிடம் செல்ஃபோனில் பேசினார். அப்போது அவருடைய கணவரும், அவருடைய அண்ணியும், ‘நீ வரும்போது என்ன கொண்டு வந்தாய், எங்கள் சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கிறாய். நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்துவிட்டால் சொத்து முழுவதும் எனக்கே கிடைக்கும்’ என்று சொல்லிக் கொடுமைப்படுத்துகிறார்கள்’ எனக் கூறி அழுதார்.

அதன்பிறகு நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருக்கும்போதே என்னுடைய அக்கா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அவருடைய இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #POLICE #CHENNAI #WOMAN #MARRIAGE #HUSBAND