'கட்டிப்பிடித்து முத்தம்'... 'நண்பனை பழிவாங்க இளைஞரின் பிளான்' ... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 31, 2019 10:03 AM
ஒன்றாக மது அருந்திவிட்டு நண்பனுடன் ஏற்பட்ட சண்டையில், ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி ரவுடி கடத்தியதாக நாடகமாடிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Chennai Man Fakes Kidnapping in Police Complaint to Avenge Friend Chennai Man Fakes Kidnapping in Police Complaint to Avenge Friend](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/chennai-man-fakes-kidnapping-in-police-complaint-to-avenge-friend.jpg)
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகேஷ். தொழிலதிபரான இவர், வில்லிவாக்கம் ஐ.சி.எப். சாலையில் காருடன் நின்ற தன்னை, ரவுடி தில் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ரூ.25 லட்சம் கேட்டு தன்னை தாக்கியதாகவும், பின்னர் கத்திமுனையில் கடத்தி சென்ற நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து உஷாரான காவல்துறையினர் தில் பாண்டியை தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவான நிலையில், வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த அவரது கூட்டாளி பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். பிரகாஷ் கைது செய்யப்பட்டதற்கு பின்பு தான் பல திடிக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், தில் பாண்டியும், முகேசும் நெருங்கிய நண்பர்கள். சம்பவத்தன்று இருவரும் நன்றாக மது குடித்துள்ளார்கள். பின்பு தில் பாண்டி தனது கூட்டாளியான பிரகாசை காரை ஓட்டும்படி கூறினார்.
அப்போது காரின் பின்பக்க இருக்கையில் தில் பாண்டியும், முகேசும் இருந்து கொண்டு மது குடித்தவாறே வந்துள்ளார்கள். அந்த நேரத்தில் இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டார்கள். இந்நிலையில் ஓடும் காரில் இருந்து முகேஷ் கீழே குதிக்க முயற்சிக்க, பிரகாஷ், காரை மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகில் ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய முகேஷ், நேராக மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்குள் சென்று விட்டதாக பிரகாஷ் கூறினார்.
ஆனால் காவல்நிலையத்திற்குள் சென்ற முகேஷ், தன்னை ரவுடி தில் பாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி கடத்தியதாக பொய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொய்யான புகார் கொடுத்து, கடத்தல் நாடகமாடிய தொழில் அதிபர் முகேசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே முகேசின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் முகேசும், தில் பாண்டியும் குடிபோதையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போலவும், நெருக்கமாக இருப்பது போலவும் புகைப்படங்கள் இருந்தன. மேலும் விசாரணையில் முகேஷ் மீது செங்குன்றம், எண்ணூர், எழும்பூர், அம்பத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், கர்நாடக மாநிலத்தில் லாரியை ஏற்றி 3 பேரை கொன்றதாகவும் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)