'சொந்த' ஊர்களுக்கு 'படையெடுக்கும்' 'சென்னை' மக்கள்... 'கோயம்பேட்டில்' அலைமோதும் 'கூட்டம்'... உயர்த்தப்பட்ட 'ஆம்னி' பேருந்துகளின் 'கட்டணம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் பணி புரிவோர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவால் மக்களுக்கு நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி-கல்லூரிகள், விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான தனியார் அலுவலகங்கள், வீட்டிலிருந்தே தங்கள் பணியாளர்களை வேலை பார்க்க சொல்லிவிட்டனர். 31ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் சென்னை கோயம்பேட்டில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் கிராமங்களில் அதுபோன்ற சூழ்நிலை இல்லை எனவும் கோயம்பேட்டில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வெளிமாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு, அரசு பேருந்துகள் வழக்கத்தை விட குறைவாகவே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலை பயன்படுத்தி கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகம் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை தினங்களில் தான் இப்படி வசூலிக்கிறார்கள் என்றால் இதுபோன்ற கொரோனா பீதியின் போதும் இவ்வாறு செய்ய வேண்டுமா? என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
