'ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாரு.. அதான் காருக்குள்ளயே வெச்சு'.. பெண் உட்பட 4 பேரால் டிராவல்ஸ் டிரைவருக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 04, 2019 03:13 PM
சென்னையைச் சேர்ந்த வாடகைக் கார் டிரைவரைக் கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் ஜெயசுதா, மற்றும் பொறியாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 வயதாகியிருந்த நாகநாதன் என்பவர் தன் குடும்பத்தை சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திலேயே விட்டுவிட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை டிராவல்ஸ் ஒன்றில் டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ஒரு பெண் உட்பட 4 பேர் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்வதாகக் கூறி நாகநாதனின் காரில் ஏறியுள்ளனர். ஆனால் அவர்கள் 9-ஆம் தேதி சென்னை திரும்பியபோது, அவர்களுடன் சென்ற நாகநாதன் திரும்பவில்லை. இதனால் சந்தேகித்த டிராவல்ஸ் உரிமையாளர் சென்னையில் உள்ள அசோக் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, கொட்டாம்பட்டி அருகே நாகநாதன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து நாகராஜனின் காரில் பயணித்தவர்களான திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுதா, பெரோஸ் அகமது, விராலிமலையைச் சேர்ந்த பொறியாளரான ஹரிஹரன், செங்கல்பட்டு ஜெகதீஷ் உள்ளிட்டோர் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் திருமணமாகாத ஜெயசுதாவும் அவரது நண்பர்களும் நாகநாதனின் காரைக் கடத்தி விற்கலாமா என அவரிடமே கேட்டுள்ளனர்.
ஆனால் முதலாளிக்கு விசுவாசமாக இருந்த நாகநாதன், இதற்கு உடன்பட மறுக்கவே, அவரைக் கொன்று கொட்டாம்பட்டி அருகில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு, அந்த காரை உறையூரில் சர்வீஸுக்கு விட்டிருந்துள்ளனர் என்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
