'உங்க மேல 144 ஆர்டர் இருக்கு'.. நடுரோட்டில் புரட்டி எடுத்த ரவுடிகளால் 'காவலர்களுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 01, 2019 03:23 PM

புதுச்சேரியின் புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சா, மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளால் நடக்கும் கொலை, கொள்ளை, மதுக் கடத்தல், இன்னும் பிற குற்றச் செயல்களை முதலியவற்றைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அதிரடியாக உத்தரவி பிறப்பத்ததன் பேரில், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் போலீஸார் சிவகுரு மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

puducherry rowdies attacked police and escaped, case filed

அப்போது கையில் கத்தியுடன் வந்து பொதுமக்களை சில ரவுடிகள் அச்சுறுத்தியதாக வந்த தகவலை அடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். முன்னதாக சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்தியால் குத்தியதோடு பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடிகள் ஜோசப், அய்யனார், அருணாசலம் உள்ளிட்டோர்தான் தற்போது வந்து அச்சுறுத்தியிருக்கிறார்கள் என்பது அங்கு தெரியவந்தது. அவர்கள் மீது 144 தடை உத்தரவும் ஏற்கனவே போடப்பட்டிருந்ததால், காவலர்கள் இருவரும் அந்த ரவுடிகள் 3 பேரையும் எச்சரித்ததோடு, தடையை மீறி நகருக்குள் வந்ததால், கைது செய்ய முற்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகளுக்கும் காவலர்களுக்கும்  இடையே வாக்குவாதம் எழுந்தது. ஆனால் சிறிது நேரத்தில் காவலர்களை அந்த ரவுடிகள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கிவிட்டனர். நடுரோட்டில் காவலர்கள் என்றும் பாராமல், அவர்களின் கடமையை செய்ய அனுமதிக்காமல், அவர்களை காயப்படுத்திவிட்டு அந்த ரவுடிகள் தப்பியோடினர். இதனிடையே பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட காவலர்களை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தப்பி ஓடிய ரவுடிகள் மீது, கொலை முயற்சியில் ஈடுபடுவது (307), காவலர்களை கடமையை செய்யவிடாமல் தடுப்பது (353) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸாரும் அமைக்கப்பட்டுள்ளனர்.

Tags : #POLICE #PUDUCHERRY #BIZARRE