'இதுக்கு மேல நானும் வாழ்ந்து குழந்தைங்களும் கஷ்டப்படணுமா?'.. 2 அம்மாக்கள் எடுத்த விபரீத முடிவு.. மகள்களுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 03, 2019 04:03 PM
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியவதி. இவருக்கு இவரது கணவர் மணிகண்டனுக்கும் 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மணிகண்டனின் அதிகப்படியான குடிப்பழக்கத்தால், குழந்தைகளையும் வீட்டையும் பராமரிக்க இயலாமல் இருந்துள்ளார். தன் கணவர் இவ்வாறு இருந்துள்ளதை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி சத்தியவதி, தன் கணவரின் செயலை இனியும் ஜீரணிக்க முடியாது என்று முடிவு செய்து, கீழமணக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தன் குழந்தைகளுடன் சென்றிருக்கிறார்.

ஆனால் செல்லும் வழியில் மீராளூரில் இறங்கி, தன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர், தனது 3 குழந்தைகளான அக்ஷயா(6), நந்தினி(4), தர்ஷினி (2) ஆகியோரை உயிருடன் பின்னலூர் ராஜ வாய்க்கால் என்று சொல்லப்படும் கால்வாயில் தூக்கி வீசிவிட்டு, தலைமறைவாகியுள்ளார்.
இதுபற்றிய ரகசிய தகவல் வந்ததை அடுத்து, இன்று அதிகாலை காட்டுமன்னார் கோயில் போலீஸார், தீயணைப்புத் துறையின் உதவியுடன் குழந்தைகளின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒரு குழந்தையின் சடலம் கிடைக்கவில்லை என்றும் தாய் சத்தியவதி தற்கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், தேனி மாவட்டம் போடி அருகே, கணவரை இழந்து 3 மகள்களை வளர்த்து வந்த லட்சுமி என்பவர் குடும்ப கஷ்டம் காரணமாக, தனது 11-ஆம், 9-ஆம், 5-ஆம் வகுப்பு பயிலும் மகள்களுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் இதில் தாய் லெட்சுமியும், கடைசி மகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். மற்ற 2 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
