'துணி துவைக்கச் சொன்ன தாய்'.. 'மகள் எடுத்த விபரீத முடிவு!'.. சென்னையில் 'ஒரே நாளில்' நடந்த 3 'சோக சம்பவங்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆலந்தூர் சபரி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். 39 வயதான இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா காரணமாக தமது வீட்டில் வேலை இல்லாமல் முடங்கி இருந்ததால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த இவர், தனது வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோல் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 45 வயதான தேசிங்கு என்பவரது மூத்த மகளான 25 வயதான பவானிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் என்பவருடன் திருமணமாகிய நிலையில், பவானி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவானியை, அவரது தாய் துணி துவைக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் உண்டானதாகவும், இதனால் மனமுடைந்த பவானி படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவானியின் தந்தை தேசிங்கு காவல் நிலையத்தில், தானே முன்வந்து புகார் அளித்துள்ளார்.
இதேபோல் பார்க் டவுனை சேர்ந்த 82 வயதான பாலசுப்ரமணியனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
