‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 14, 2020 05:19 PM

ஊரடங்கால் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாத வருத்தத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bihar labour commits suicide near Ambuttur in Chennai

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மனைவி, குழந்தையை பார்க்க முடியாத சோகத்தில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து விசாராணை மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தெரிவித்த போலீசார், ‘பீகார் மாநிலம் பர்னியா பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (25). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பபிதா குமாரி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரந்தீர் என்ற 3 மாதக் குழந்தை ஒன்று உள்ளது.

ராஜீவ்வின் உறவினர் லட்டு என்பவர் சென்னையில் பெயின்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் மூலம் ராஜீவ் அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளாதல், ராஜீவ் வேலை பார்த்த கம்பெனியும் மூடப்பட்டுள்ளது. அதனால் வேலை இல்லாமல் ராஜீவ் உள்ளிட்ட அனைவரும் அறையிலேயே முடங்கி இருந்துள்ளனர்.

அப்போது தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என லட்டுவிடம் ராஜீவ் கூறியுள்ளார். ஆனால் தற்போது ரயில் சேவை இல்லாததால், ஊரடங்கு முடிந்த பின்னர் ஊருக்கு செல்லலாம் என ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி காலை கழிவறையில் கேபிள் வயரால் தூக்குப்போட்ட நிலையில் ராஜீவ் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்று ராஜீவ் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகு அனுப்பி வைத்தோம். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராஜீவ்வின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பட்டது’ என போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜீவ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவருடன் தங்கியிருங்ந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

News Credits: Vikatan