'ஸ்மார்ட் பள்ளிக்கூடமாக மாற்றிய ஆசிரியர்...' 'ஊரடங்கிலும் டெய்லி பள்ளிக்கு வந்து...' பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயமும் அருமையா பண்ணிருக்கார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு நேரத்திலும் தான் பாடம் நடத்தி வந்த பள்ளியை, புதுப்பித்து வண்ண மயமாக்கிய ஸ்மார்ட் பள்ளிக்கூடமாக மாற்றிய ஆசிரியரை சமூகவலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே சுங்கசலே என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு செயல்படும் அரசு பள்ளியில் சுமார் 12 ஆண்டுகள் இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் காந்தராஜூ என்ற ஆசிரியர் கொரோனா ஊரடங்கு முன்பே பாழடைந்து இருக்கும் பள்ளியை விடுமுறை காலத்தில் மறுஉருவாக்கம் செய்ய அவர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆசிரியர் காந்தராஜூ அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் பள்ளியை புதுப்பிக்க ரூ.50 ஆயிரத்தை ஒதுக்கியது. அதையடுத்து கொரோனா ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டதால் பள்ளியை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் பள்ளி திறக்கப்படுவதற்குள் எப்படியாவது பள்ளிக்கட்டிடங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார் காந்தராஜூ. ஊரடங்கு காலத்தில் ஒரு நாள் தவறாமல் தினமும் பள்ளிக்கு வந்து தனது வேலையை தொடர்ந்தார்.
அனைத்து பணிகளும் முடிந்து தற்போது அந்த இடமே புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. காந்தராஜூ தனியாளாக பள்ளி சுவர்களில் வண்ணங்கள் தீட்டியதுடன், பூச்செடிகள் வரைந்து, தரையில் அமர்ந்த குழந்தைகளுக்கு தற்போது நாற்காலிகள், மேஜைகள் போன்ற வசதிக்களை ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் அளித்த ரூ.50,000-த்தோடு அவர் சார்பாக ரூ.40,000 செலவு செய்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளார். குறிப்பாக இவரின் இந்த செயலுக்கு பள்ளி அபிவிருத்தி, கண்காணிப்பு குழு மற்றும் பெற்றோர்களும் உதவி செய்துள்ளனர்.
இதற்கு முன்பே காந்தராஜூ அந்த கிராம மக்கள் உதவியுடன் சாலை பழுது பார்த்தல் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 12 மாணவ மாணவிகள் மட்டுமே படிக்கும் தன்னுடைய பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் சென்று அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மற்ற செய்திகள்
