இனிமேல் பணம் எடுக்க 'ஏடிஎம் சென்டர்' போக தேவையில்லை...! 'ஒரு போன் பண்ணினா மட்டும் போதும், உடனே...' கேரள அரசின் அதிரடி திட்டம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 06, 2020 07:36 PM

ஏடிஎம் சென்டருக்கு செல்லாமல் வீட்டிலேயே பணம் எடுக்கும் திட்டத்தை கேரள அரசின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவித்துள்ளார்.

Kerala\'s new plan to keep people away from ATMs

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை பட்டியலில் கேரள மாநிலம் 5-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 327 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 59 பேர் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கேரள மாநிலமே இறப்பு விகிதத்தில் குறைவாகவும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் கேரளாவில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த சூழலில் பொதுமக்களுக்கு தங்களின் அன்றாட தேவைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இவற்றில் ஒன்றாக கேரள மாநில நிதியமைச்சர் இன்று ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இனி பண தேவைகளுக்காக மக்கள் வெளியே போய் ஏடிஎம் சென்டர்களுக்கும், வங்கிகளுக்கும் அலைய தேவை இல்லை என கூறியுள்ளார். ஒரு போன் செய்தால் தபால்காரர் மூலம் பணம் உங்களது வீட்டிற்கே வரும் எனவும் உறுதியளித்துள்ளார். கேரள அரசு அஞ்சல் துறையுடன் சேர்ந்து இத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், இதை பயன்படுத்தும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்.

அதாவது, வரும் 8 ஆம் தேதி முதல் வீடுகளில் இருந்து பணம் பெற முடியும் எனவும், ஒரு நபர் அதிகபட்சமாக ரூ10,000 வரை பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் தபால் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தங்களின் முகவரி, பெயர், செல்போன் எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், கணக்கு எண், தேவைப்படும் பணம் ஆகியவற்றை தெரிவித்தால் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணத்தைத் தந்துவிடுவார்.

இந்த திட்டமானது ஆதார் எண் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி மக்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் ஏடிஎம்களுக்குச் செல்ல வேண்டாம் இதனால் நாம் சமூல விலகலைக் கடைப்பிடிப்பது போலவும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் முதியவர்கள் மற்றும் ஓய்வூதியம் வாங்குபவர்களும் வங்கி, ஏடிஎம்களுக்கு செல்லாமல் இந்தத் திட்டத்தின் மூலம் பணத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்

வீட்டிற்கு வரும் தபால்காரர் வைத்திருக்கும் இயந்திரத்தில் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, ரேகை வைத்தவுடன், தேவைப்படும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கலாம்.

மக்கள் கை வைக்கும் இயந்திரத்தை ஒவ்வொரு முறையும் சானிடைசர் மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், அதன்பின்பே மக்கள் தங்கள் விரல் ரேகை வைக்கவேண்டும் எனவும் அன்பு கட்டளையிட்டுள்ளார். இந்த செயல்முறைகள் முடிந்த பின் மக்களும் சானடைசர் மூலம் கைகளைக் கழுவ வேண்டும். இந்தத் திட்டத்துக்காக போதுமான அளவு சானிடைசர்களை தபால் துறையும் வாங்கி இருப்பு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #ATM #MONEY