குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 24, 2020 11:43 AM

தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Coronavirus Lockdown Rs 1000 To Ration Card Holders TN CM

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  சமூக பரவலைத் தடுப்பதற்காக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், தமிழக முதலமைச்சர் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ 3250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என அவர் சட்டசபையில் அறிவித்துள்ளார். நியாய விலை கடைகளில் மார்ச் மாத பொருட்களை வாங்க தவறி இருந்தால் அதனை ஏப்ரல் மாதம் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ 1000, ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் எனவும், பிற மாநிலத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ 1000 மற்றும் கூடுதலாக ரூ 1000 வழங்கப்படும் எனவும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 2 நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும், இருக்கும் இடத்தைவிட்டு நகர முடியாதவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே சென்று சூடான உணவு வழங்கப்படும், பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும் எனவும், நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #EDAPPADIKPALANISWAMI #MONEY #TN #CM #RATIONCARD #AUTO #CORONAVIRUS #LOCKDOWN