'திருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?'... 'வெறும் 3 மணி நேரத்துல... ஒரு 'மினி' செல்போன் கடை போடுற அளவுக்கா திருடறது!?'... சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை, திருடன் ஒருவன் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபரிடம் பைக்கில் வந்த இருவர் செல்போனை திருடிச் சென்றுள்ளனர். உடனடியாக சாலையில் இருந்தவர்கள் திருடர்களை பிடிக்க முயற்சி செய்யவே, திருடர்கள் வேகமாக தப்பிவிட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர், தன்னுடைய காரை திருடர்கள் சென்ற பைக்கிற்கு முன்னதாக வழிமறித்து நிறுத்தியுள்ளார். இதனால், திருடர்கள் நிலைதடுமாறியுள்ளனர். ஆனால், அவர்களுள் ஒருவரை மட்டுமே பொதுமக்களால் மடக்கிப் பிடிக்க முடிந்தது. பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும், திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேரத்தில் 18 செல்போன்களை அவர்கள் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விலை அதிகமான செல்போன்களை திருடி, அவற்றை குறைந்த விலைக்கு விற்று சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி செல்போன் திருட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஒருவர் மட்டுமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், தப்பிச்சென்ற மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
