‘இதுதான்’ என் வாழ்க்கையோட ‘லட்சியமே’... ‘சென்னை’ பெண்ணிடம் வேலையைக் காட்டிய ‘பட்டதாரி’ இளைஞர்... விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 19, 2020 09:38 PM

சென்னையில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chennai Man Cheats 2 Women On Pretext Of Marriage Arrested

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மறுமணம் செய்துகொள்வதற்காக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்த ரமேஷ் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன்னை துறைமுக அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்ட ரமேஷ் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே தன் வாழ்க்கையின் லட்சியம் என அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணிற்கும், ரமேஷிற்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது 25 சவரன் நகையும், ரூ 1 லட்சம் பணமும் வரதட்சணையாகக் கொடுப்பதாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவந்த நிலையில், வரதட்சணையாக கொடுப்பதற்காக வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்ற ரமேஷ் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

போலீஸ் விசாரணையில், ரமேஷிற்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் திருமணத்தின்போது தன்னை அரசு அதிகாரி எனக் கூறி ஏமாற்றியவர், திருமணத்திற்குப் பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருநின்றவூர் பகுதியில் மறைந்திருந்த அவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MONEY #POLICE #CHENNAI #MARRIAGE #CHEATING