‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Nov 13, 2019 08:03 PM
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி ஒரு மணி நேரம் செல்ஃபோனை அணைத்து வைத்து விட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுமாறு பெற்றோருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “குழந்தைகள் தினத்தன்று (நவம்பர் 14) இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை பெற்றோர் தங்களது செல்போனை அணைத்து வைத்து விட்டு, அந்த நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் செலவிடலாம். இதை அந்த ஒரு நாள் மட்டுமில்லாது, தினமும் அல்லது வாரத்தில் ஒரு நாள் கடைபிடிக்கலாம். இப்படிச் செய்வதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் இருப்பதுடன், பெற்றோர்-குழந்தைகள் இடையே வலுவான உறவு உண்டாகும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்
