‘3-வது மாடியிலிருந்து உடைந்து விழுந்த ஜன்னல்’.. கீழே நின்ற +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பள்ளியின் 3-வது மாடியிலிருந்து ஜன்னல் உடைந்து பள்ளி மாணவியின் தலையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை மதுக்கூர் அடுத்த சிரமேல்குடி பகுதியை சேர்ந்தவர் ஆசிகா. இவர் தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று ஆசிகா பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியின் 3-வது மாடியில் இருந்து ஜன்னல் ஒன்று உடைந்து விழுந்துள்ளது. அந்த சமயம் கீழே நின்றுகொண்டிருந்த மாணவி ஆசிகாவின் தலையில் ஜன்னல் பலமாக விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சகமாணவிகள் உடனே ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வரும் மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவிக்கு தலையில் அடிப்பட்டது வேதனை அளிப்பதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
News Credits: Vikatan
