'நிச்சயம் மிராக்கிள் தான்'... 'இளைஞர்களின் அசுர வேகம்'... 'ஈசிஆரில்' வீட்டை தும்சம் செய்த கார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீட்டுக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் நேற்று காலை புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்த கார், புதுநெம்மேலி குப்பம் அருகில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையின் அருகிலிருந்த மீனவர் கணபதி என்பவரது வீட்டிற்குள் புகுந்தது. அப்போது வந்த வேகத்தில், வீட்டின் முகப்பில் உள்ள மின் கம்பம், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, காரானது அந்த வீட்டு வாசலில் புகுந்தது.
இந்த கோர விபத்தில் காரின் ஒரு பகுதியும், மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தன. இதற்கிடையே வீட்டு வாசல் ஓரத்தில் படுத்திருந்த 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினர்.முன்னதாக கார் மின்கம்பத்தில் மோதிய வேகத்தில், மின் கம்பிகளில் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்து விழுந்திருந்தால் பெரும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருக்கும்.
இதற்கிடையே காரில் வந்த 4 வாலிபர்களும் காயமின்றி உயிர் தப்பினார்கள். அதிவேகத்தில் கார் வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், கார் ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்று அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
