'இந்த விஷயத்துல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல'... 'ஃபீல் பண்ண வச்சிட்டீங்க'... உருகிய மெலனியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார். அப்போது இந்திய மக்களின் வரவேற்பு குறித்து நெகிழ்ந்து போனார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடும்பத்துடன் இந்தியா வந்த அவரை, பிரதமர் மோடி நேரடியாக சென்று வரவேற்றார். முதல் நாளான நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.
இதனிடையே இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லியின் மோதிபாக் பகுதியில் உள்ள அரசு சர்வோதயா மேல்நிலைப்பள்ளிக்கு சென்று குழந்தைகளை சந்தித்து உரையாடினார். அப்போது பள்ளிக்குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பாரம்பரிய உடையணிந்திருந்த குழந்தைகள் மெலனியாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பார்த்து நெகிழ்ந்து போன மெலனியா, '' இந்தியா வருவது இதுதான் முதல்முறை. இந்திய மக்களின் அன்பும் வரவேற்பும் என்னை நெகிழ செய்து விட்டது. இந்திய மக்களின் அன்பிற்கும், உபசரிப்பிற்கும் ஈடு இணை எதுவுமில்லை'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
