‘பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் சரமாரி வெட்டு’.. மதுரையில் பலசரக்கு வியாபாரிக்கு நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெட்ரோல் குண்டு வீசி பலசரக்கு வியாபாரியை மர்மகும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (43). இவர் அப்பகுதியில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை அடைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது முகத்தை மூடியபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல் கணேசனிடம் தகராறு செய்துள்ளது. இதனால் கணேசன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணேசனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரத்தொடங்கியுள்ளனர்.
உடனே தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை கடையின் மீது வீசி, கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
