'உங்க மாப்ளைய கொலை பண்ணிட்டேன்'... பொண்ண எனக்கு 'கல்யாணம்' பண்ணி தாங்க... மதுரையில் நடந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 03, 2020 11:48 AM

திருமணத்துக்கு மீறிய உறவால், மதுரையில் தனியார் வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Bank Employee Murder Near Madurai, Police Investigate

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவருக்கும், மதுரை மேலத்தெருவை சேர்ந்த ஜோதிலட்சுமி(21) என்பவருக்கும் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜோதிலட்சுமியின் தந்தை விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை கவனித்துக் கொள்வதற்காக ஜோதிலட்சுமி தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கார்த்திக்(24) என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக உருமாற, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதையறிந்த மணிகண்டன், ஜோதிலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று அதேபோல தகராறு ஏற்பட ஜோதிலட்சுமி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையறிந்த கார்த்திக், ஜோதிலட்சுமியின் தாயிடம் சென்று அவரது மகளை தனக்கு 2-வதாக திருமணம் செய்து வைக்குமாறு கேட்டிருக்கிறார். பதிலுக்கு அவர்கள் ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் அவரை திருமணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் வீட்டிற்கு வந்த கார்த்திக் குடும்ப பிரச்சினை தொடர்பாக ஜோதிலட்சுமி குடும்பத்தினர் சமரசம் பேச அழைப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதனை நம்பி மணிகண்டன் அவருடன் சென்றிருக்கிறார். அதற்குப்பின் அவரது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது. இதனால் மணிகண்டனின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துப்போயினர். இதற்கிடையில் நேற்று ஜோதிலட்சுமியின் தாயார் கோயிலுக்கு செல்ல, அங்கு சென்ற கார்த்திக் உன்னுடைய மருமகனை கொலை செய்து விட்டேன்.

இப்போது உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிலட்சுமி தாயார் மணிகண்டனின் பெற்றோரிடம் இதுகுறித்து சொல்ல அவர்கள் உடனே பதறிப்போய் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் மணிகண்டனை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது ஜோதிலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தனியார் தோப்பில் மணிகண்டன் கழுத்து உள்பட 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக ஜோதிலட்சுமி மற்றும் அவரது அம்மா இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.