‘தல’ தோனியின் நெக்ஸ்ட் ப்ளான் இதுதான்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Aug 12, 2019 10:47 AM
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு மாத விடுப்பில் அங்கு சென்று பயிற்சி பெற்று வருவதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் இடம்பெறவில்லை. தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக பயிற்சி அளிப்பது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் தோனி பேசி வருவதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 -வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் லடாக்கில் உள்ள லே நகரில் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் இந்திய தேசிய கொடியை தோனி ஏற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
