'150 சவரன்.. வீட்ட எழுதிக் கேட்டாங்க.. நாயை விட்டு விரட்டுனாங்க!'.. வருமான வரி அதிகாரி மீது வரதட்சணை புகார் அளித்த டாக்டர் பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 30, 2019 06:28 PM

சென்னையில் அண்ணா நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண இணையதளம் மூலம் அறிமுகமானவர் மறைமலைநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பாலசுப்ரமணியனின் மகன் பாலமுரளிதரன்.

chennai doctor woman complaints against income tax AC

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், உதவி கமிஷனராக பணியாற்றியதாகக் கூறியிருக்கிறார் பாலமுரளிதரன். ஆனால் அதன் பின் மணமகன் பாலமுரளிதரனின் வீட்டாரோ 50 லட்சம் ரூபாய் வரதட்சணை, மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சொகுசு கார், மணமகளுக்கு 150 சவரன் நகை, மணமகனுக்கு 25 சவரன் நகை  உள்ளிட்டவற்றை கேட்டதாகவும், அதற்காக முன்பணமாக பெண் வீட்டார் தரப்பில் இருந்து 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அப்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தவிர திருமண அழைப்பிதழ், மண்டப செலவு, சமையல் செலவு, பட்டுப்புடவை என அனைத்துக்கும் பெண் வீட்டார் செலவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் மணமகளின் வீட்டை மாப்பிள்ளை வீட்டினர் எழுதித் தரும்படி கேட்டதாகவும், ஆனால் திருமணத்துக்குப் பிறகு, தருவதாக பெண் வீட்டார் கூறியதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் தெரிகிறது. இதைக் கேட்கச் சென்ற பெண் வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் நாயைக் கொண்டு விரட்டியடித்ததாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஓய்வு பெற்ற டி.எஸ்.பி பாலசுப்ரமணியம், தங்கள் குடும்பத்தினர் மீது தவறான புகாரை அளித்ததோடு, மணமகள் வீட்டார் அவசரப்பட்டுவிட்டதாகவும், விரைவில் விரிவாக விளக்கம் அளிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது வரதட்சணை புகார் என்பதால் இருதரப்பினரையும் தீர விசாரித்தே முடிவுக்கு வரமுடியும் என்று திருமங்கள் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #WEDDING #BRIDE #COMPLAINT