முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 05, 2020 06:04 PM

பெங்களூருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவர் 2 முறை ஏமாற்றப்பட்டு ரூ 37 லட்சத்தை இழந்துள்ளார்.

Bangalore Engineer Got Cheated Twice Lost Rs 37 Lakh To FB Friend

பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை ஒன்று உள்ளதாகவும், அதற்காக ரூ 25 லட்சம் செலுத்தினால் போதும் எனவும் கூறியுள்ளார்.

அதை நம்பிய இன்ஜினியர் அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அவர் கேட்டது போலவே ரூ 25 லட்சத்தை மனைவிக்குத் தெரியாமல் அனுப்பியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த எண்ணிற்கு அழைத்தபோது ஸ்விட்ச் ஆஃப் என வர, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டது பற்றி அவர் தன் பேஸ்புக் தோழி ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதைக் கேட்ட அந்தப் பெண் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அனைத்தும் டார்க் நெட் மூலமாக நடைபெறுவதாகவும், அந்த டார்க் நெட் மூலமாக ஏமாற்றியவரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு ரூ 12 லட்சம் வரை செலவாகும் என அந்தப் பெண் கூற, தன்னுடைய வீட்டை விற்று அதையும் அவர் கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்தப் பெண்ணையும் அவர் தொடர்பு கொள்ள முடியாமல் போக தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் அளிக்க, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போனில் பேசிய மர்ம நபரும், பேஸ்புக்கில் லூஸி என்ற பெயரில் பழகிய நபரும் ஒருவராகவே இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தனது கணவர் ரூ 37 லட்சத்தை இழந்தது பற்றி அறிந்து அதிர்ந்துபோன அவருடைய மனைவி, மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் தற்போது அவர் கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : #KARNATAKA #MONEY #FACEBOOK #BANGALORE #COMPUTER #ENGINEER #WIFE #FRIEND