'என்னடா 10 ரூவா கொடுக்குற'...'கொள்ளையடிக்க புது டெக்னிக்'...கோவையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 13, 2019 12:28 PM

அழகிகள் போல வேடம் அணிந்து வந்த இளைஞர்கள், கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two men extort money posing as transgenders in Coimbatore

திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விக்னேஷ். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் இவர், கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது படிப்பை முடித்துள்ளார். இதனிடையே அவரது மாற்று சான்றிதழ் தொலைந்து போனதால், அதனுடைய நகலை பெறுவதற்காக  பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அழகிகள் சிலர் விக்னேஷிடம் பணம் கேட்டுள்ளார்கள். அப்போது அவர் ரூ.10 கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணம் கேட்டால் 10 ரூபாய் கொடுக்குற என, அந்த பணத்தை வாங்க மறுத்த அவர்கள், விக்னேஷை மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அழகிகளிடமிருந்து தனது பணத்தை மீட்க முயற்சித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த பீளமேடு போலீசார் அழகிகளை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களின் பெயர் கனி, ஆனந்தி என்று கூறினர்.

இதனிடையே காவல்துறையினருக்கு அவர்கள் மேல் சந்தேகம் வர, அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில், விக்னேஷிடம் பணம் பறித்தது அழகிகள் அல்ல. அழகிகள் போல் வேடம் அணிந்து புதுவிதமான வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

பிடிபட்டவர்கள் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர்கள் என்பதும், மணி என்பவர் கனி என்றும், ஆனந்தன் என்பவர் ஆனந்தி என்றும் தங்களது பெயரை மாற்றி, அழகிகள் போல் சேலை மற்றும் நவநாகரிக உடை அணிந்து வாலிபரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கேரளாவை சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை ராம்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 அழகிகள் திடீரென்று, சவுகத் அலியை இடித்து தள்ளினர். அப்போது ஏற்பட்ட தகராறில் சவுகத் அலியிடமிருந்து பணம் பறிக்க முயற்சித்துள்ளனர். இது குறித்து சவுகத்அலி கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அழகிகள் போல் வேடம் அணிந்து பணம் பறிக்க முயன்றது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஜய், கேரள மாநிலம் நெம்மாராவை சேர்ந்த ரத்தீஷ், பாலக்காடு அருகே உள்ள கெடும்பசித்தூரை சேர்ந்த மணி, சிவகங்கையை சேர்ந்த சச்சின், நாகப்பட்டினத்தை சேர்ந்த கிரியா பியான்ஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள். பணத்துக்காக அழகி வேடம் போட்டு இளைஞர்கள் பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #EXTORTED MONEY #COIMBATORE #TRANSGENDERS