‘திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்களால் பரபரப்பு’.. ‘தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Nov 04, 2019 05:47 PM
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு கருப்பு மை பூசியும், மாட்டு சாணத்தை வீசியும் அவமதிப்பு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வல்லம் போலீஸார் திருவள்ளுவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்துள்ளனர்.
இதையடுத்து திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் டிஎஸ்பி தனிப்படை அமைத்து விசாரிக்குமாறு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளுவர் உருவத்திற்கு காவி நிறத்தில் உடை அணிவிக்கப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
