‘குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று’... ‘அத்துமீறிய போலீசால் நடந்த அதிர்ச்சி சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 11, 2019 09:34 PM

கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்ற காவலர் ஒருவர், அப்பெண்ணை வர்ணித்து அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police chased the woman and used abusing words in covai

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வன்னியன் கோவில் பகுதியில், லேத் வொர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிக்குமார். இவரது மனைவி 35 வயதான சரண்யா, கடந்த திங்கள்கிழமை அன்று மாலை, கீரநத்தம் பகுதியில் உள்ள தனது தாயாரைப் பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, காவலர் சீருடையில் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்த சரண்யா, தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்.

ஆனால், அவரை முந்திச் சென்ற அந்தக் காவலர் வழிமறித்து, ‘எங்கே செல்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சரண்யா கீரநத்தம் செல்வதாகக் கூறி வண்டியின் வேகத்தை கூட்டியுள்ளார். இருப்பினும், பின்தொடர்ந்து வந்த அந்த காவலர், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது’ என்று அத்துமீறிப் பேசியவாறே சரண்யாவை பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துப்போன சரண்யா, அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு ஃபேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கும் துரத்தி சென்ற காவலர், சரண்யாவை தகாத வார்த்தையில் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, தன் கணவர் ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அதன்பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து எச்சரித்தனர். அப்போது அந்தக் காவலர் குடிபோதையில் இருந்ததையும், அவரது இருசக்கர வாகனத்தில் மதுபானத்தை வைத்திருந்ததையும் கண்ட பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். மேலும் சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என்று கூறிய பொதுமக்கள், கோவில்பாளையம் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில் அந்த காவலரின் பெயர் பிரபாகரன் என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனின் இருசக்கர வாகனத்தில் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், அந்த காவலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சரண்யா அளித்த புகாரின்பேரில், காவலர் பிரபாகரனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : #POLICE #SUSPEND #COIMBATORE #WOMAN #ABUSE