'துணை முதல்வர்' என்ன 'மாடு' பிடி வீரரா?... 'துரைமுருகன்' கேள்வியால் சட்டப்பேரவையில் 'சிரிப்பொலி'... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' கொடுத்த 'விளக்கம்...!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜல்லிக்கட்டு நாயகன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என அதிமுக உறுப்பினர்கள் கூறியதற்கு, திமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவை சிரிப்பலையில் ஆழ்ந்தது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓ.பி.எஸ். பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என அழைத்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வரை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறீர்களே அவர் என்ன மாடுபிடி வீரரா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே. இதற்கு முன் எப்போதாவது காளைகளை அடக்கி இருக்கிறாரா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு எங்களை அழைத்துச் செல்வீர்களா என கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக நாடே போராட்டம் நடத்திய போது சிறப்பு அனுமதி வழங்கி போட்டி நடத்தியதால் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகன் என அன்போடு அழைக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுபிடிக்க வந்தால் அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இருவரின் பேச்சாலும் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழும்பியது.
இந்த விவாதம் நடைபெற்ற போது ஓ.பி.எஸ். அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
