'இந்த விஷயத்துல இவங்க தான் பர்ஸ்ட்'... 'ஐடி ஊழியர்கள் இரண்டாவது'... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும், தற்கொலை முடிவில் இருந்து 33 ஆயிரம் பேர் காப்பாற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 104 என்ற இலவச தொலைபேசி சேவை மையம் மூலம், மனநலம், தற்கொலை முடிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த நோய்க்கு என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம், அதற்கான சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதமான ஆலோசனைகளை மருத்துவர்களின் அறிவுரைப்படி வழங்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 33 ஆயிரம் பேர் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது தமிழகம் முழுவதும் உள்ள 80 அரசு மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அவர்களது பெயர் விவரங்களை சேகரித்துள்ளனர். இதில் தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் உயிரை மாய்த்துக் கொள்ள விஷம் அருந்தியவர்கள், தூக்கிட்டு கொண்டவர்கள் முதல் இடத்தையும், கடுமையான மன உளைச்சல், பணி நெருக்கடியால் தகவல் ஐடி எனப்படும் தொழில் நுட்ப ஊழியர்களும், கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனை காரணமாகவும் அதிக அளவில் தற்கொலை முடிவை தேடிச் செல்வது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரியையும், தொடர்பு எண்களையும் பெற்ற இந்த ஆலோசனை குழுவினர், அவர்களை தற்கொலை எண்ணத்தை கைவிட தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதுவரை 70 சதவிகிதம் பேரை தற்கொலை எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளதாகவும், ஆலோசனை வேண்டுவோர் 104 ஐ இலவசமாக தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சனையையும் கண்டு அஞ்சி நடுங்காமல், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் மன உறுதியாக இருந்தால் போதும், அத்தனை தடைகளையும் தகர்த்து சாதிக்கலாம் என்று மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
