நிமிடத்தில் நடந்து முடிந்த கோரம்... தண்டவாளத்தை கடந்தபோது... யானைக்கு நேர்ந்த கடும் துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 25, 2019 05:51 PM
கோவை அருகே ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக - கேரள எல்லையான வாளையார் அருகே கோட்டைக்காடு என்ற வனப்பகுதி உள்ளது. இந்த காட்டில் அதிகளவில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்தப் பகுதியில், கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் ரயில்பாதை உள்ளது. இந்நிலையில், நள்ளிரவு யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சித்தது. அப்போது வாளையாரில் இருந்து கஞ்சிகோடு நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 24 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானை மீது ரயில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த யானை அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறை மற்றும் பாலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள், யானையை ஆய்வு செய்தனர். மேலும் வன மருத்துவர் உயிரிழந்த யானையை பிரேதப் பரிசோதனை செய்த பின், அருகே உள்ள வனப்பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் மட்டும் 3 யானைகள், இதேபோல் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காட்டு யானைகள் கடக்கும் பகுதியில் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், தொடர்ந்து ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
