தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 பெண் உட்பட 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களின் விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 05, 2020 09:23 AM

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 411 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து நிற்கிறது.

covid19 death toll updates TamilNadu தமிழ்நாடு கொரோனா பலி எண்ணிக்கை

முன்னதாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் 25.03.2020 அன்று உயிரிழந்தார். நேற்றைய தினம் விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆணும், தேனியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண்ணும் உயிரிழந்தனர். 

இந்நிலையில் துபாயில் இருந்து தமிழகம் வந்த 71 வயது மதிக்கத்தக்க முதியவர்  02.04.2020 அன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 11.45 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட தோடு அவற்றை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் உயிரிழந்த இந்த முதியவர் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்தவர் என்றும், இவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதாகவும் தெரிகிறது.

இதேபோல் சென்னையைச் சேர்ந்த 60 வயது ஆண் நபர் ஒருவர் 01.04.2020 அன்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 1.45 மணிக்கு உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.