‘என்னையும், என் ஃப்ரண்டையும் கடத்திட்டாங்க’... 11 வயது ‘சிறுமியின்’ ஃபோனால் ‘பதறிப்போய்’ ஓடிய... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஹோம்வொர்க் எழுதாததால் பள்ளிக்குச் செல்ல பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 2 மாணவிகளை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மும்பை தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிகள் இருவர் காலை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளனர். பின்னர் அதில் ஒரு மாணவி பெற்றோருக்கு செல்ஃபோனில் அழைத்து, முகமூடி அணிந்த பெண் ஒருவர் தன்னையும், தன் தோழியையும் கத்தி முனையில் கடத்தி காரில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் ஒரு சிக்னலில் அந்தப் பெண்ணின் கையைக் கடித்து அவரிடமிருந்து தப்பித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக சிறுமி கூறிய இடத்திற்குச் சென்று இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக அவர்கள் போலீசாரிடமும் புகார் அளிக்க, சிறுமிகள் கூறிய இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிறுமிகள் கூறியதுபோல ஒரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் எதுவுமே கிடைக்காததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிகளிடம் தீவிர விசாரணை நடத்த, அவர்கள் நடந்த உண்மையைக் கூறியுள்ளனர். விசாரணையில், சம்பவத்தன்று சிறுமிகள் இருவரும் பள்ளியில் கொடுத்த ஹோம்வொர்க்கை எழுதாமல் சென்றதற்காக ஆசிரியை அவர்களுடைய பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதும், பெற்றோரிடம் இதுபற்றி கூறினால் திட்டுவார்கள் என பயந்த சிறுமிகள் கடத்தல் நாடகம் ஆடியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த சிறுமிகளை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
