காதலுக்கு 'தடை' விதித்த தந்தை... மனமுடைந்த காதலன் காதலிக்கு செய்த 'கொடூரம்'... அதன் பின் நடந்த 'பயங்கரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉயிருக்கு உயிராகத் காதலித்த தன் காதலியின் தலையில் காதலன் சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபன்ஷு. இவர் ரதி பிரீத்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் டெல்லி காவல்துறையில் பணி நியமனம் பெற்று, பயிற்சியில் இருந்தபோது சந்தித்து காதலிக்கத் தொடங்கினர்.
கடந்த 2018-ம் ஆண்டு பயிற்சியை முடித்த பிரீத்திக்கு, பட்பர்கஞ்ச் தொழிலகப் பகுதியிலும், தீபன்ஷுவுக்கு, பஜன்புரா காவல்நிலையத்திலும் காவல் உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் கிடைத்தது
இந்த நிலையில், பிரீத்தியைத் திருமணம் செய்வது தொடர்பாக தனது தந்தையுடன் பிரீத்தியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் தீபன்ஷு. ஆனால் பிரீத்தியின் தந்தையோ மகளின் காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்; இதனால் காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினர்.
கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், தீபன்ஷு மனமுடைந்து காணப்பட்டார். அதற்கு மேல் பொறுக்க முடியாத தீபன், பிரீத்தி வழக்கமாக வந்து செல்லும் டெல்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அன்று இரவு 9.30 மணிக்கு பிரீத்தி ரயில் நிலையம் வந்திறங்கி வெளியில் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து 50 அடி துாரம் வெளியில் அவர் நடந்து சென்ற நிலையில், பின்னால் வந்த தீபன்ஷு திடீரென பிரீத்தியின் தலையில் தனது துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரீத்தி அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து தீபன் காரில் ஏறி தப்பிச் சென்றார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர். தீபன்ஷுவின் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரது கார் டெல்லியில் இருந்து வடக்கு நோக்கி ஹரியானா மாநிலத்திற்குள் சென்றது தெரியவந்தது.
போலீசார் தேடிச் சென்றபோது, ஹரியானா மாநிலம் கர்நல் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த காரில் தீபன்ஷு சடலமாகக் கிடந்தார். காருக்குள் இருந்தபடி தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் தீபன்ஷு என்பது விசாரணையில் தெரியவந்தது. கொலை மற்றும் சந்தேக மரணம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
