‘ஏற்கெனவே 9 பேரை இதேபோல’... ‘என்கவுன்டருக்கு’ முன் கொடுத்த ‘அதிரவைக்கும்’ வாக்குமூலம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 18, 2019 11:07 AM
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் அதிரவைக்கும் வாக்குமூலம் ஒன்றை அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
![Hyderabad Rape Murder Accused Confessed To Burning 9 Others Hyderabad Rape Murder Accused Confessed To Burning 9 Others](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/hyderabad-rape-murder-accused-confessed-to-burning-9-others.jpg)
ஹைதராபாத்தில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கில் ஆரீஃப், நவீன், சிவா, சென்னகேசவலு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல தரப்பிலிருந்தும் முழக்கம் எழுந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை அவர்கள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரின் பின்னணி குறித்து உயர்மட்ட காவல்துறை குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் தெலுங்கானா - கர்நாடகா எல்லைப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல அந்தப் பகுதியில் 15 பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் கைதானவர்களில் 2 பேர் அதிரவைக்கும் வாக்குமூலம் ஒன்றை அளித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுன்டருக்கு முன் ஆரீஃப், சென்னகேசவலு இருவரும் ஏற்கெனவே 9 பெண்களை இதேபோல தாங்கள் தான் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என அவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் குறித்து தற்போது மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)