‘தாத்தாவுடன் வெளியே சென்ற’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 08, 2019 05:59 PM

சேலத்தில் தாத்தாவுடன் வெளியே சென்ற குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Salem 2 Year Old Boy Baby Dies After Falling Into Water Tank

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் - பூங்கொடி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் இவர்களது 2 வயது குழந்தையான தமிழரசுவை குழந்தையின் தாத்தா  இன்று காலை வேலைக்குச் செல்லும்போது உடன் அழைத்துச் சென்றுள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஓரமாக குழந்தையை விளையாட விட்டுவிட்டு, அவர் கயிறு திரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கே கயிறு திரிக்க பயன்படுத்தும் நார்களை ஊறவைக்கும் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி அதில் விழுந்துள்ளது. கயிறு திரிக்கும் இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த சத்தத்தால் குழந்தை தொட்டிக்குள் விழுந்தது அங்கு யாருக்குமே தெரியாமல் போயுள்ளது. பின்னர் நீண்ட நேரம் கழித்து குழந்தையைக் காணவில்லை என தேடும்போது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.

அதைப் பார்த்து அதிர்ந்துபோன குழந்தையின் தாத்தா உடனடியாக குழந்தையை மீட்டு தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து பின் மேல்சிகிச்சைக்காக குழந்தையை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SALEM #BABY #BOY #WATER #WATERTANK #DEAD #GRANDFATHER